சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டணையை சென்னை ஐகோர்ட் நிறுத்திவைத்தது. பி.வி.பி. கேபிடல் நிறுவனத்திடம் ரூ.1.35 கோடியை லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் கடனாக பெற்றிருந்தனர். கடனுக்காக லிங்குசாமி அளித்திருந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பி.வி.பி. நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லிங்குசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனதால் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்கனவே 20% தொகையை செலுத்தியுள்ளோம்; மேலும் செலுத்த தயார் என லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி; காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் 20% டெபாசிட் தொகை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 20% டெபாசிட் தொகையை 6 வாரங்களில் செலுத்த நீதிபதி நிபந்தனை விதித்தார்.