Wednesday, May 22, 2024
Home » காரை ஊராட்சியில் ரூ1.20 கோடியில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்: எம்பி, எம்எல்ஏ அடிக்கல்

காரை ஊராட்சியில் ரூ1.20 கோடியில் 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்: எம்பி, எம்எல்ஏ அடிக்கல்

by Neethimaan


வாலாஜாபாத்: காரை ஊராட்சியில் உள்ள வாலாஜாபாத் ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் நேற்று மாலை ரூ1.20 கோடி மதிப்பில் புதிதாக 6 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளுக்கு காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் அரசு மற்றும் வங்கி அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சியின் மையப் பகுதியில் ஒன்றிய அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி திட்டங்கள் மூலம் அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அதேபோல் இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்ததால், இங்கு வகுப்பறைகளில் இடப்பற்றாக்குறை நிலவியது. இதனால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காரை ஊராட்சியில் உள்ள ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு நபார்டு திட்டத்தின்கீழ் ₹1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை காரை ஊராட்சியில் கல்லூரி மாணவர் விடுதி அருகே அரசு பள்ளிக்கு கூடுதலாக புதிய 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், சிவிஎம்பி.எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, காரை ஊராட்சியில் ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ₹1.20 கோடி மதிப்பில் புதிதாக 6 கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் மணி, லோகுதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள் செல்வம், துணை தலைவர் கவிதா டில்லிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twenty − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi