சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை தனது 69வது பிறந்தநாளை கட்சியினர் முன்னிலையில் கொண்டாடினார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் கொண்டு வந்த 69 கிலோ கேக் மற்றும் இதர நிர்வாகிகள் கொண்டு வந்த 20 முதல் 50 கிலோ எடையுள்ள பல கேக்குகள் என மொத்தம் 200 கிலோ கேக்குகளை வீட்டு வாசலில் 20 அடி நீளத்திற்கு வரிசையாக அடுக்கி வைத்தனர்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து, அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். சிறுவர், சிறுமிகள், கட்சியினருக்கு கேக் வழங்கப்பட்டது. பின்னர், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 125 பேருக்கு வேஷ்டி, சேலை, இனிப்பு பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் வாழ்த்துகள் தெரிவித்து மலர்மாலைகள், மலர்கொத்துகள், பரிசு பொருட்களை கொடுத்தனர். இதேபோல், ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.