பெங்களூரு: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஏற்கனவே 60 சதவீத ஓட்டு உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜ தலைமையிலான கூட்டணிகள் தீவிரமாக தயாராக தொடங்கிவிட்டன. இதுகுறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘கர்நாடகாவில் பாஜ – மஜத கூட்டணி அமைவதற்கான சமிக்ஞைகள் உள்ளன. அவர்களால் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. நாங்கள் கர்நாடகாவில் சொந்த காலில் நின்று தேர்தலை எதிர்கொள்வோம்.
மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள 26-28 கட்சிகள் இந்தியா கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறோம். அதனால் 60 சதவீதம் ஓட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு உறுதியாகிவிட்டது. 60 சதவீதம் ஓட்டு இந்தியா கூட்டணிக்கு உறுதியாகிவிட்டதால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெறும் 40 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஜனநாயக முறைப்படி கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்று கார்கே நம்பிக்கை தெரிவித்தார்.