திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு சுமார் 6 ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே கோனூர், அனுமந்தராயன்கோட்டை, ஆவாரம்பட்டி, குட்டத்துஆவரம்பட்டி, மயிலாப்பூர், தர்மத்துப்பட்டி, ஆதி லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாளி ஆகிய வாழை ரகங்களை பயிரிட்டிருந்தனர். வாழைக்காய்கள் நன்கு விளைந்து குலை தள்ளி இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் 50 ஏக்கரில் பயிரிட்டிருந்த சுமார் 6,000 வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.80 லட்சம். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பெரிய அளவில் நஷ்டம் அடைந்து வேதனையில் உள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.