நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அடுத்த சீராகான் – ரீதாசாஹிப் சாலையின் வழியாக சென்ற வாகனம், தனது கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 9 வயது குழந்தை உட்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சுசீலா திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பள்ளத்தில் கிடந்ததால், அவற்றை நேற்று மாலை ஒவ்வொன்றாக மீட்புக் குழுவினர் மீட்டனர். பின்னர் அவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களுக்கு நேற்று அவர்களது கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அப்போது கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது. மலைகளுக்கு மத்தியில் உள்ள சுடுகாட்டில் உடல்கள் ஒன்றாக தகனம் செய்யப்பட்டன. இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து கலெக்டர் வந்தனா சிங் கூறுகையில், ‘காயமடைந்த குழந்தைக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்’ என்று கூறினார்.