வேலூர், அக்.19: ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குடியாத்தத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, ஏட்டு ராஜவேல், முதல்நிலை காவலர் வெங்கடேசன் கொண்ட குழுவினர் குடியாத்தம்-பரதராமி சாலையில் நேற்று காலை கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனமடங்கி சாலை சந்திப்பில் இருந்து வேகமாக ஆந்திராவுக்குள் நுழைய முயன்ற ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்த போலீசார், அரிசியை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் குடியாத்தம் அபிப்ரஹ்மான்(26) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட அபிப்ரஹ்மானை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.