கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (53). இவர் தமுமுகவில் நிர்வாகியாகவும், சமூக ஆர்வலராகவும், கூடுவாஞ்சேரி- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியில் ஹோட்டல் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் வந்து உணவு பார்சல் கட்ட சொல்லியுள்ளனர். உணவு கட்டித்தர தாமதமானதால் கடை ஊழியர்களுக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இது குறித்து கேள்விப்பட்டதும் ஹைதர்அலி தனது கடைக்கு சென்று 5 பேர் கொண்ட கும்பலிடம் என்ன பிரச்னை என்று கேட்டு சமாதானம் பேசி உள்ளார். அதற்குள் அந்த கும்பல் ஹைதர்அலியை பார்த்து அசிங்கமாக திட்டி உன்னை தான் தேடிக்கொண்டிருந்தோம் என்று கூறி ஹைதர்அலி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹைதர்அலியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஹைதர்அலி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்த கௌதம் (29), நந்திவரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (26), விஸ்வநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (27), சென்னை தரமணியை சேர்ந்த பிரகாஷ் (27), சந்தோஷ் (30) ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று மாலை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.