மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால், பல இடங்களில் வாகனங்கள் நடுவழியில் சிக்கி தவித்தன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் இர்சால்வாடி கிராமத்தில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். 21 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 30 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.