லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17, 18ம் தேதி காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 48 லட்சம் இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியிட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக 240 பேரை பிடித்து போலீசார் விசாரித்தது. இதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டுமென மாநிலம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் கேள்வித்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்ள உத்தரப்பிரதேச அரசு மறுத்த போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த 6 மாதத்தில் மறு தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனே லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.