சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள மைதானத்தில் நேற்று மாலை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வேடிக்கை பார்க்க வந்த சிலர் சிகரெட் பிடித்து விட்டு அங்குள்ள குப்பையில் அணைக்காமல் போட்டனர். குப்பையில் பட்டாசு கழிவுகள் கிடந்ததால் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் கிரிக்கெட் விளையாட வந்த முத்துராமலிங்கம் நகர் முத்துராஜ் (19), சித்துராஜபுரம் அய்யனார் காலனியை சேர்ந்த கருப்பசாமி (21), கார்த்திக் (23) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதில் வாலிபர் கார்த்திக் 32 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.