Tuesday, May 14, 2024
Home » பம்பை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

பம்பை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

by Arun Kumar

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெண் ஒருவர் மீட்கப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி அருகே உதிமூடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார் (52). அவரது மகள் நிரஞ்சனா (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று மாலை அனில்குமார், நிரஞ்சனா, அனில்குமாரின் தம்பி சுனில்குமாரின் மகன் கவுதம் (13), அனில்குமாரின் தங்கை அனிதா ஆகியோர் பம்பை ஆற்றில் குளிப்பதற்காகவும், துணி துவைப்பதற்காகவும் சென்றனர். நிரஞ்சனாவும், அனிதாவும் துணி துவைத்து கொண்டிருந்தனர். கவுதம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்றுவதற்காக அனில்குமார் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதைப் பார்த்த நிரஞ்சனாவும், அனிதாவும் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது கூக்குரலைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அனிதாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அனில் குமார், மகள் நிரஞ்சனா, கவுதம் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ரான்னி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi