கூடலூர்: கூடலூர் அருகே பந்திப்பூர் வனத்தில் 3 சிறுத்தைகள் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய மங்களா கிராமம் அருகே ஒரு வயது பெண் சிறுத்தை இறந்து கிடந்தது. சிறுத்தையை வனபாதுகாவலர் டாக்டர் ரமேஷ் குமார் பிரேத பரிசோதனை செய்தார். அவர் கூறுகையில் சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணம் என்றும், 2 அல்லது 3 நாட்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தார்.
இதேபோல் படுகாயமடைந்த மற்றொரு ஆண் சிறுத்தையின் சடலம் குந்த்கெரே மலைத்தொடர் கணியன்புரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் குண்டலுபேட்டை அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இந்த சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்ட நாயை தின்றதால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 3 சிறுத்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வனபாதுகாவலர் ரமேஷ் கூறினார்.