கிருஷ்ணகிரி, அக்.5: கிருஷ்ணகிரி கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி தலைமையிலான போலீசார், பெங்களூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 337 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ₹1 லட்சத்து 72 ஆயிரமாகும். இதையடுத்து காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலுர் கிராமத்தை சேர்ந்த மனோகர்சிங் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கார் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.