Saturday, May 4, 2024
Home » அம்பை சரகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அம்பை சரகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

by MuthuKumar

நெல்லை: அம்பையில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அச்சரகத்தில் உள்ள 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் போலீசார் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமின்றி, போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இவ்விவகாரம் தொடர்புடைய இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இவ்விசாரணை வரும் 10ம்தேதி வரை நடக்கிறது. அம்பை காவல்துறை சரகத்தில் நீறுபூத்த நெருப்பாக விஸ்வரூபம் எடுக்கும் இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் உள்பட போலீசார் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தனிப்பிரிவு ஏட்டுக்கள் விகேபுரம் போகபூமன், கல்லிடைக்குறிச்சி ராஜ்குமார் ஆகியோர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்துக்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல் நிலைய பணிக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அம்பை உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், அம்பை தனிபிரிவு காவலர் சந்தானகுமார், கூடுதல் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் உள்ளிட்டோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஐஜி பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார். சேரன்மகாதேவி சப்-கலெக்டரும், விசாரணை அதிகாரியுமான முகமது சபீர் ஆலம் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

20 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi