Tuesday, May 14, 2024
Home » அதிமுக ஆட்சியின் போது மருந்துகள் இறக்குமதி செய்த விவகாரம்; 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக விடிய விடிய ரெய்டு: வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் சிக்கின

அதிமுக ஆட்சியின் போது மருந்துகள் இறக்குமதி செய்த விவகாரம்; 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக விடிய விடிய ரெய்டு: வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் சிக்கின

by Neethimaan


சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக 5 மருந்து தயாரிப்பு மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் 2வது நாளாக இன்றும் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியின்போது கொரோனா காலக்கட்டத்தில் அவசர தேவைக்காக மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து இறக்கு மதிநிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், அதை மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சில மருந்து தயாரிப்பு மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் மருந்துகள் தயாரிக்க டென்டர் எடுத்த நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்த நிறுவனங்களின் பட்டியலை வைத்து அவர்களின் உற்பத்தி மற்றும் ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு வருகின்றனர். அதில் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி,சென்னை வேப்பேரியில் உள்ள கே.வி.எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்துகள் மொத்த கொள்முதல் செய்யும் கவர்லால் குழுமம் மற்றும் அதன் தொழிற்சாலைகள், மாதவரம் பகுதியில் உள்ள வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யும் ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் பகுதியில் உள்ள கே.பி.மனிஷ் குளோபல் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் என 5 நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வருமான வரித்துறையிடம் தாக்கல் ெசய்த ஆவணங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இந்த 5 மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கொள்முதல் நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூர் என 30 இடங்களில் நேற்று காலை முதல் இரண்டாவது நாளாக இன்றும் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக பார்க் டவுன் பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கவர்லால் குழுமத்திற்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீடுகளில் விடிய விடிய 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் பல நூறு கோடி மருந்துகள் கொள்முதல் மற்றும் இறக்குமதியில் அதிகளவில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்க பணம், வெளிநாட்டு முதலீடுகள் பல சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரீடியனட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அண்ணாசாலை கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம், ேவப்பேரியில் உள்ள கே.வி.எண்டர்பிரைசஸ் நிறுவனம், சென்னை மாதவரம் நடராஜன் தெருவில் உள்ள மணிஷ் குளோபல் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம், கவ்மன் எக்ஸாக்ட் மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, ெசன்னை கிண்டியில் உள்ள அலுவலகத்திலும் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையில் மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததற்கான ஆவணங்கள், வெளிநாடுகளில் பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனத்தில் இருந்தே மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன மூலப்பொருட்கள் கொள்முதல் செய்த ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகு தான் எத்தனை கோடி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi