ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மைய நகரில் ஏராளமான மாணவர்கள் தங்கி பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த பீகார், உ.பி.யைச் சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொல செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்துள்ளனர். நீட், ஜே.இ.இ, போன்ற நுழைவுத்தேர்வுகளின் பயிற்சி நிலையங்களுக்கு பிரபலமான கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டிலும் 15 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவாகியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாதது, பெற்றோரின் அழுத்தம் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.