Saturday, May 4, 2024
Home » திம்மாபுரம் ஊராட்சியில் ரூ.27.40 லட்சத்தில் நாடக மேடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

திம்மாபுரம் ஊராட்சியில் ரூ.27.40 லட்சத்தில் நாடக மேடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

by Ranjith

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.90 லட்சம் ஒதுக்கீடு செய்து, நாடக மேடையும், மாநில நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.17.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலகண்ணன் தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.9.90 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை மற்றும் ரூ.17.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதனைதொடர்ந்து நாடக கலைஞர்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் எழிலரசன், அவைத்தலைவர் ரத்தினவேலு, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராம், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோடை காலத்தையொட்டி கருங்குழி பேரூராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகிய கலந்து கொண்டு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

fifteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi