காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தச்சம்பட்டறை கிராமம். இந்த கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் சொர்ணவாரி பருவத்தில் அறுவடை செய்த நெல்களை விற்பனைக்காக, நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி உள்ளனர். ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையத்தில், 13 ஆயிரத்து 515 மூட்டைகள் இருப்பில் உள்ளது. மேலும் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். இந்த நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் வெளியே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தச்சம்பட்டறை கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று முதல் மூடிவிட்டு, அடுத்த பருவத்தில் மீண்டும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே, தரையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெல் கொள்முதல் நிலையத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பினர். ஆனால், அங்கு அதிகாரிகள் யாரும் வராததால், போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்து இறங்கியுள்ள நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை எனில் ரோட்டில் நெல் மணிகளை கொட்டி போராடவும் தயங்கமாட்டோம் என தெரிவித்தனர்….