விருதுநகர், அக்.18: விருதுநகர் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக ஏஐடியுசி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தர்ணா போராட்டம் சங்க தலைவர் ராஜேந்திரன், செயல்தலைவர் பிச்சைக்கனி தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க பொன்னுப்பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தர்ணாவில் 15வது ஊதிய ஒப்பந்த போச்சுவார்த்தையை உடனே அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி முடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 25 சத போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி உள்ள விடுப்புகளை பாரபட்சமின்றி வழங்க வேண்டும். டிச.2022 முதல் செப்.2023 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கும் போது போக்குவரத்து கழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா செய்தனர்.