திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித்(24) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடற்பயிற்சியாளர் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அஜித் என்ற 24 வயதான இளைஞர் பல ஆண்டுகளாக திருவள்ளூர் பகுதியில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. திடீரென அவருக்கு மேலும் மாரடைப்பு அதிகரித்ததன் காரணமாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜிம் பயிற்சி மேற்கொள்பவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஜிம் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதிக எடை தூக்குதல், அதிக ஊக்கமருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்த திருமணமாகாத 24 வயதான இளைஞர் அஜித் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சக உடற்பயிற்சியாளர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.