வேடசந்தூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே எரியோடு பகுதி கொண்டமநாயக்கனூரில் தோட்டம் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஷாஜகானிடம் ‘‘என்னிடம் 2,000 நோட்டுகள் ஒரு கோடிக்கு உள்ளது. அதனை மாற்றி கொடுத்தால் கமிஷன் தருகிறேன்’’ என கூறியுள்ளார். இதுபற்றி ஷாஜகான் நண்பர்கள் குணசேகரன், ராஜசேகரிடம் கூறியுள்ளார். அவர்களும் ‘‘ரூ.1 கோடி கொடுத்தால் ரூ.90 லட்சத்திற்கு ரூ.500 நோட்டுகள் தருகிறோம்’’ என கூறியுள்ளனர். அதற்கு சக்திவேல் ஒப்புக்கொண்டு, தனது தோட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி குணசேகரன், ராஜசேகர், ஷாஜகான் ஆகியோர் பணத்துடன் சக்திவேலின் தோட்டத்திற்கு நேற்றுமுன்தினம் காரில் வந்துள்ளனர். அப்போது சக்திவேல் கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து அவர்களை கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.90 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.