ஊட்டி: தாவரவியல் பூங்கா இரண்டாம் சீசனுக்கு தயாராகிறது. முதல் சீசனுக்காக நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசனின் போது பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வார்கள். இதனால், இவ்விரு சீசனின் போது ஊட்டி தாவரவியல் பூங்காவை தோட்டக்கலைத்துறையினர் தயார் செய்வது வழக்கம். தற்போது முதல் சீசன் முடிந்த நிலையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சீசன் நடைபெறவுள்ளது. இரண்டாவது சீசனின் போதும், முதல் சீசன் போன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். மேலும், புல் மைதானங்களிலும் அலங்காரம் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், முதல் சீசன் முடிந்த நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளில் இருந்து தற்போது விதைகள் சேகரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. சேகரிக்கப்பட்ட விதைகளை விதைப்பு பணிகளுக்காக தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விதைகள் தயார் ஆனவுடன் பூங்காவில் உள்ள தொட்டிகள் மற்றும் பாத்திகளில் பல வகையான மலர் செடிகளின் விதைகள் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தற்போது பூங்காவில் உள்ள பாத்திகள் அனைத்தும் தயார் செய்யும் பணியை ஊழியர்கள் துவக்கியுள்ளனர். பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்த பாத்திகளில் இருந்த இன்கா மேரிகோல்டு மலர் செடிகள் வாடி உதிர துவங்கின. இதனை தொடர்ந்து, இந்த மலர் செடிகளை அகற்றிவிட்டு, பாத்திகள் தயார் செய்யும் பணிகளை ஊழியர்கள் துவக்கியுள்ளனர். நேற்று நுழைவு வாயில் பகுதியில் இருந்த மலர் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஓரிரு நாட்களில், இந்த பாத்திகள் தயார் செய்யப்பட்டு புதிய மலர் செடிகள் நடவு செய்யப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.