மரக்காணம், நவ. 27: மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு செல்லியம்மன் கோயில் தெருவில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. இந்த 2 கோயில்களை சுற்றிலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் 2 கோயில்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்ய பூசாரி கணபதி சென்றுள்ளார். அப்போது 2 கோயில்களிலும் இருந்த உண்டியல்களின் பூட்டை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரி கணபதி உடனடியாக கோயில் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் கோயில் உண்டியல்களை உடைத்த நபர்களை நாங்கள் பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து பூசாரி கணபதி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.