நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 படகுகளுடன் 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழியமும் அதிகரித்துள்ளது.
மீன் படிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் 19 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.