தாம்பரம், மார்ச் 14: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 185 விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றி, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், 5 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் கட்டிடங்கள் மீது வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள் மற்றும் 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டுள்ளது. விளம்பர பலகைகளை அகற்றும் இப்பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும், தாம்பரம் மாநகராட்சியை தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல், திடக்கழிவுகளை அகற்றுதல் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தவிர்ப்பதில் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள், மின்சார கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.