சென்னை: தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர்சாதனம் இல்லாத டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னையில் 402, விழுப்புரத்தில் 347, கும்பகோணம், சேலத்தில் தலா 303, கோவையில் 115, மதுரையில் 251, நெல்லையில் 50 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்கள் www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வழக்கமாக ஏறி, இறங்க 3 படிகள் உள்ளநிலையில் இந்த பேருந்துகளில் 2 படிகள், பேருந்துகளை முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு புதிய பேருந்துகள் வடிவமைக்கப்படுகிறது. இதற்கிடையே, டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இப்போது தீர்ப்பு பெறப்பட்டுவிட்டது. எனவே, மே 23ம் தேதிக்குள் டெண்டர் கோரலாம் என அறிவித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, அரசின் வழிகாட்டுதல்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும்.