கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஒரு வேன் சென்றது. கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சிக்னலில் சென்றபோது திடீரென சிகப்பு சிக்னல் எரிந்தது. இதனால் வேன் டிரைவர் சட்டென்று பிரேக் போட்டபோது பின்னால் அடுத்தடுத்து வந்த 2 கார்கள் அடுத்தடுத்து மோதியது. அந்த சமயத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஒரு இறப்பு நிகழ்ச்சிக்காக 16 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு வேன், விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் பிடித்தபோது அந்த வேன் தலை குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 16 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு உடனடியாக கூடுவாஞ்சேரி, பொத்தேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து விபத்தில் சிக்கிய 2 கார்கள், வேனை அப்புறப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்படி, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.