புதுடெல்லி: பாஜக எம்பி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு எப்ஐஆரில் கூறப்பட்ட விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவ்விவகாரத்தில் ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க விவசாய அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யக் கோரி கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களது போராட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின் போது நடந்த போராட்டத்தின் போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். அதனால் அவர்கள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசுவதாக கூறினர். விவசாய அமைப்புகள் தலையிட்டு 5 நாட்கள் அவகாசம் கேட்டன. இதற்கிடையே ஒன்றிய அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முசாபர்நகரில் விவசாய அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடத்தின. அப்போது குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு எப்ஐஆர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. அதில், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான இரண்டு எப்ஐஆர்களில் 15 பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. அதில் 10 துன்புறுத்தல்கள் வீராங்கனைகளை முறைகேடாகத் தொட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் சிலரின் மார்பகங்களையும், வயிற்றையும் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், இரு எப்ஐஆரிலும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு எப்ஐஆர்களிலும் ஐபிசி 354, 354 ஏ, 354 டி, 34 ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் யாவும், கடந்த 2012 முதல் 2022ம் ஆண்டு வரை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போக்சோ பிரிவுகளின் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது. அந்த எப்ஐஆரில், தனது மகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், மூச்சு பரிசோதனைக்காக மார்பகத்தை தொட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு எப்ஐஆரிலும், வீரர்களின் சுவாசத்தை பரிசோதிப்பதாக கூறி, அவர்களின் மார்பகம் மற்றும் வயிற்றில் கைகளை வைத்து தேய்த்ததாகவும், மூச்சை பரிசோதிக்கும் சாக்கில் வீராங்கனைகளின் டி-சர்ட்டை மேல்நோக்கி நகர்த்திவிட்டு, அவர்களின் தொப்புளில் கையை வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவையாவும் மல்யுத்த வீராங்கனைகள் தங்களது வாக்குமூலத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.