புதுடெல்லி: பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் 14 எப்டிசி மருந்துகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. எப்டிசி எனப்படுவது ஒரே டோஸ் மருந்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் கலந்திருப்பது ஆகும். இவை பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் இந்த டோஸ் மருந்து உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 14 எப்டிசி மருந்துகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்:
பொதுவான தொற்று, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் நிம்சுலைடு+ பாராசிட்டமால், குளோபெனிரமைன் மாலேட்+ கோடின் சிரப், பால்கோடின், ப்ரோமெதாசின், அமாக்சிலின்+ ப்ரோம்ஹெக்சின் உட்பட 14 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எப்டிசி மருந்துகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே பொது நலன் கருதி இதனை உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.