திருவனந்தபுரம்: கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நடத்திய போராட்டத்தில் தபால் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் உள்பட 12 பேர் நீதிமன்றத்தில் ரூ3.81 லட்சம் அபராதத் தொகையை கட்டினர். கேரள சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் முகம்மது ரியாஸ். முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் ஆவார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எப்ஐ) தேசியத் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு டிஒய்எப்ஐ அமைப்பின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்தபோது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ரியாசின் தலைமையில் போராட்டம் நடந்தது.
வடகரையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடந்தது. அப்போது டிஒய்எப்ஐ தொண்டர்கள் தபால் அலுவலகத்தை சூறையாடினர். இதில் தபால்துறை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மேஜைகள் உள்பட பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 1.29 லட்சம் நஷ்ட ஈடு கோரி வடகரை போஸ்ட் மாஸ்டர் ராஜன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அபராதத் தொகையை உடனே கட்ட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரியாஸ் உள்பட 12 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை கட்ட உத்தரவிட்டது. அதன் பிறகும் டிஒய்எப்ஐ அமைப்பினர் அபராதத் தொகையை கட்டவில்லை. இதையடுத்து தபால் துறை சார்பில் வடகரை நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், வட்டி மற்றும் நீதிமன்ற செலவுடன் சேர்த்து ரூ3.81 லட்சம் பணத்தை கட்ட உத்தரவிட்டது. தொடர்ந்து அமைச்சர் முகம்மது ரியாஸ் உள்பட 12 பேரும் நேற்று வடகரை நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னிலையில் அபராதத் தொகையை கட்டினர்.