கமுதி, பிப், 10: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிழக்கு அபிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி (40). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று மாலை அபிராமத்தில் வீரசோழன் செல்லும் சாலையில் உள்ள 115 அடி உயர தனியார் செல்போன் டவரின் உச்சிக்கு ஏறினார். இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அபிராமம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் வீரபாண்டியை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத அவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று தனது வேஷ்டியை கழுத்தில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்பாகவே நடந்தது. தகவலறிந்த கமுதி தீயணைப்பு வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறிச்சென்று வீரபாண்டி உடலை கீழே கொண்டுவந்தனர். பின் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.