மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்எஸ்சி சிஜிஎல் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்.21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்விற்கு 7,500 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பட்டப்படிப்பு முடித்து, 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான வயது வரம்பு சலுகை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32, ஓபிசி பிரிவினருக்கு 30.
மேலும் இது தொடர்பான தகவல்களை www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இத்தேர்விற்கு இணையம் வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டி தேர்வர்கள் விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.