திருமலை: செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ெதாடர்ந்து நடந்த கூட்டத்தில் தெலங்கானா வளர்ச்சிக்கு மாநில அரசு தடையாக உள்ளதாக பேசினார். தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்- திருப்பதி வந்தேபாரத் ரயிலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், பீபிநகர் எய்ம்ஸ், 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.11,355 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
தெலங்கானா வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், இங்குள்ள மாநில அரசு அதற்கு ஒத்துழைக்கவே இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையாத வகையில் தெலங்கானா மாநில அரசு தடையாக உள்ளது. சமீபத்தில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அக்கட்சி தலைவர்கள் பீதியடைந்துள்ளனர். அவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளதால், அச்சத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர். இவ்வாறு பேசினார்.
- பிரதமரை 5வது முறை புறக்கணித்த முதல்வர் தெலங்கானாவில் கடந்த 14 மாதங்களில் 4 முறை அரசு முறை பயணமாக ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் அரசு நலத்திட்ட துவக்க விழாவில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேடையில் தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், விழாவை அவர் 5வது முறையாக புறக்கணித்து விமான நிலையத்திற்கு சென்று, பிரதமரையும் அவர் வரவேற்கவில்லை.