சென்னை: 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் வழங்கினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கினார். தமிழ்நாட்டில் வாழும் லட்சக்கணக்கான கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, கலைஞர்களின் வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளியேற்றி வைத்துள்ளார்.
1954ம் ஆண்டு முதல் சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் இருந்த அமைப்பினை தமிழ்நாடு இயல், இசை, நாடகம் என்று 1973ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்த கலைஞரின், நூற்றாண்டு விழா காணும் இந்த தருணத்தில் இம்மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்கினார்.
2021 – 22ம் சட்டமன்ற அறிவிப்பின்படி கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாடும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பொற்கிழி தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் படி இந்நிதியாண்டில் 10 கலைஞர்கள் பொற்கிழி வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக ரூ.1 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து நலிவுற்ற நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன், வாகை சந்திரசேகர், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.