சென்னை: மாதவரம் ரவுண்டானா பகுதியில் கஞ்சா கடத்தல் நடப்பதாக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், அதில் இருந்த பையில் 155 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த நல்லபெருமாள் (40), சென்னையைச் சேர்ந்த துரைராஜா (33) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நல்லபெருமாள், துரைராஜா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.