காஞ்சிபுரம்: கலைஞர் பிறந்தநாளில் 100 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைப்பது என காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் க.செல்வம் எம்பி, கோகுலகண்ணன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கழக ஆக்கப்பணி குறித்து பேசினார்.
கூட்டத்தில், வருகின்ற ஜூன் 3ம்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், 100 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்தல், ஒன்றிய, நகர, பேரூரில் 70 வயதுக்கு மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல், பெண்களுக்கு இலவசமாக ஓட்டுநர் பயிற்சி அளித்து உரிமம் வாங்கி தருதல், ஜூன் 3ம்தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், திமுக கொடியேற்றுவது, கலைஞரின் மார்பளவு, முழு உருவ சிலை வைத்து புகழை அனைத்து இடங்களிலும் பரப்புவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநெல்லிபாபு, சேகர், ஞானசேகரன், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.