சின்னமனூர், ஜூலை 17: சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி கிராம ஊராட்சி மேற்கு தெருவில் குடியிருப்பவர் பத்மநாபன். விவசாயி. வேப்பம்பட்டியிலிருந்து சீலையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் 2 ஏக்கர் தோட்டத்தில் பச்சை வாழை பயிரிட்டு இருந்தார். தற்போது வாழைகளில் குலை தள்ளி வாழைத்தார்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்து அறுவடை செய்யும் நிலையில் இருக்கிறது. நேற்று மாலை பத்மநாபன் தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது இவரை கண்டதும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார். பத்பநாபன் சுற்றிப்பார்த்தபோது 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களில் வாழைத்தார்களை வெட்டியதும், அருகில் உள்ள தோட்டத்தில் பதுக்கி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் ஒரு சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரில் ஓடைப்பட்டி போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.