சத்தியமங்கலம், ஏப்.13: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, சார் ஆட்சியர் மனிஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று பவானிசாகர் அணையின் மீது தேர்தல் ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலூன்களை அணை மீது பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.