புதுடெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி 26ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு, வன்னியர் சமுதாயத்துக்கு10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எதிர்மனுதாரராக இருந்த சென்னையை சேர்ந்த சி.ஆர் ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நான் உட்பட இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயனடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால், இந்த சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனவும், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை எனவும், ஏற்கனவே மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஏற்கனவே இதே போல் பிறப்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடும், அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீட்டும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….