நாகர்கோவில், ஜூலை 28: 10, பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய 50 மாணவர்கள் கல்வித்துறை நடத்திய வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்டு தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கடந்த ஜூன், ஜூலை 2023-ல் துணைத்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் ஜூலை 24 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்துணைத் தேர்வு எழுதிய மற்றும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு உயர்க்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக ஐடிஐ, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான நேரடி சேர்க்கை முகாம் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த முகாமில் அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 41 பள்ளிகளைச் சேர்ந்த 130 மாணவர்கள் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டனர். அதில் 50 மாணவர்கள் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்தனர். சேர்க்கை முகாமிற்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.