பாலக்கோடு, ஆக.30: பாலக்கோடு அருகே 10 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை 4 ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும், வாகன தணிக்கையைும் முடுக்கி விட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 மினி சரக்கு வேனில் 25 மூட்டைகளில் 10.25 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே, 2 வாகனங்களில் வந்த 5 பேரை சுற்றிவளைத்தனர். இதில், 2 பேர் தப்பிய நிலையில், 3 பேர் வசமாக சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில, தண்டுகாரன அள்ளியைச் சேர்ந்த சம்பத்(28), அசோக்குமார்(21) மற்றும் சொன்னம்பட்டியைச் சேர்ந்த கோகுல்(20) என்பது தெரிய வந்தது. இதயைடுத்து, 3 பேரையும் கைது செய்த குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், தப்பியோடிய காரிமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தனூரைச் சேர்ந்த கைலாசம் ஆகியோரை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.