தா.பழூர், ஜூன் 15: தா.பழூர் அருகே பள்ளி இடை நின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்ததால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் இடையே நின்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி சென்ற கல்வி ஆண்டில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அழைத்து வந்து பொதுத்தேர்வு எழுத விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் இடைநின்ற நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு சூழல்களில் காணப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
அனைத்து பாட ஆசிரியர்கள் மூலம் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு அவர்களை ஊக்குவித்ததின் பேரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மீண்டும் 11ம் வகுப்பில் சேர்ந்து உள்ளனர். அவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.