செய்யாறு, மே 31: செய்யாறில் ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ஒ.ஜோதி நேற்று மாலை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாய மாநாடு நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலராக செய்யாறு சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத் தலைமை தாங்கினார். தாசில்தார் கி.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகர மன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன், வருவாய் துறை சங்க பிரதிநிதிகள் பாஸ்கரன், ஸ்ரீதர், ஏ.ரமேஷ், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் புருஷோத்தமன், கிரண்பிரசாத், ராஜி, ரகுபதி ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்எல்ஏ ஒ.ஜோதி 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 16 பேருக்கு பட்டா மாறுதல் சான்று, 31 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் சான்று, 23 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம், 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 பேர் உள்ளிட்ட 204 பேருக்கு ரூ.57 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.தினகரன், ஏ.ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்டத்தாசில்தார் எஸ்.ராஜலட்சுமி நன்றி கூறினார்.