திருவண்ணாமலை, ஜூலை 29: திருவண்ணாமலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர், மாமியார் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (30). அவரது மனைவி லீனா (25), இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. திருமணமானதிலிருந்து கணவன் மனைவிக்கிடையே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ₹5 லட்சம் மற்றும் 10 சவரன் நகையை வரதட்சணையாக வாங்கி வருமாறு மனைவியிடம் கணவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதற்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். மேலும் மனைவியிடம் இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட கணவர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை மகளிர் போலீசில் லீனா கொடுத்த புகாரின் பேரில், கணவர் சிவப்பிரகாசம் மற்றும் மாமியார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.