தர்மபுரி, ஜூன் 14: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ₹36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டத்தில் இருந்து 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிரிந்து உதயமானது. பின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக, கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் தனியாக பரித்தபின்னர் கலெக்டர் அலுவலகம் தனியாக 1967ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்தார்.
முதல் கலெக்டர் திருமால், இதுவரை 45க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதை கலெக்டர் அலுவலகம் கட்டி 56 ஆண்டுகள் ஆகிறது. வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி பணிகள் இடம் விஸ்தரிப்பும், இடம் தேவைகளும் அதிகரித்துள்ளது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுவும் போதுமானதாக இல்லை. சில அரசு துறைகள், வாடகை கட்டிடங்களில், இன்னும் வெளியில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு செலவு சுமையாக உள்ளது. அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 34 துறைகள் இயங்கி வருகின்றன. இக்கட்டிடத்தில் இடம் இல்லாமல் தனித்தனியாக ஆங்காங்கே அரசு துறைகள் இயங்கி வருகின்றன.
இதை தவிர்க்க கட்டிடத்தில் அனைத்து அரசு துறைகளும் கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது புதியதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு சுற்றுலா ஓய்வு மாளிகைபின்புறத்தில், பழைய ஆர்டிஒ ஆபீஸ் மைதானத்தில், 3ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். தற்போது ₹36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒருமாதமாக கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில் கலெக்டர் அலுவலகம் 56 ஆண்டுகளாக ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் முக்கிய அரசு துறைகள் இயங்க போதிய இடவசதி இல்லை. இதையடுத்து அனைத்து முக்கிய துறைகளும், ஒரே கட்டிடத்தில் இயங்க புதிய தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதன்மை கட்டிடம் ₹36.62 கோடியில் தரை தளம் மற்றும் 5மாடி கொண்ட கட்டிடம் தற்போது விறுவிறுப்பாக கட்டப்பட்டு வருகிறது என்றனர்.