Tuesday, June 4, 2024
Home » ₹1.85 கோடியில் வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள்

₹1.85 கோடியில் வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள்

by Karthik Yash

கிருஷ்ணகிரி, ஜூன் 24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ₹1.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி கிராமத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் விவசாயி சின்னப்பரெட்டி என்பவர் ₹8.90 லட்சம் மானியத்தில், ஜெர்பரா மலர் சாகுபடி செய்துள்ளதையும், 2 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைத்து, பட்டன்ரோஸ் சாகுபடி செய்துள்ளதையும் கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டார். அப்போது, தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சொட்டுநீர் பாசன வசதிகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், தளி ஒன்றியம் தொட்டப்பனூரில் நாகபூஷணரெட்டி என்பவர், ₹1.33 லட்சம் மதிப்பில் சாமந்தி பூ செடிகள் பயிரிட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, நுண்ணீர் பாசன வசதி குறித்து கேட்டறிந்தார். பின்னர், தளி ஒன்றியம் ஆருப்பள்ளியில், விவசாயி நாராயணரெட்டி என்பவர் முழு மானியத்தில் ₹45 ஆயிரம் மதிப்பில் டிராகன் ப்ரூட் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாகுபடி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார்.

தளியில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், கொய்மலர் மகத்துவ மையம் 56 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு திசு வாழை சாகுபடி, ஜெர்பரா, கார்னேசன்ரோஜா, ஜிப்சோ, பில்லா பேட் ஆப் பாரடைஸ், ஹெலிக்கோனியா, கோல்டன் ராட், கிளோடியோலஸ் போன்ற கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை கலெக்டர் பார்வையிட்டார். மத்திகிரி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நெல்லி, சப்போட்டா ஒட்டு செடி, எலுமிச்சை நாற்று, மா நெறுக்கு ஒட்டு, புளி ஒட்டு, கொய்யா ரகம், கத்திரி நாற்று, காரமாணி உற்பத்தி, பெங்களூரா, நீலம், அல்போன்சா, காலப்பாடு, செந்தூரா, மல்கோவா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜீனூர் தோட்டக்கலை பண்ணை வளாகத்தில், சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு தோட்டக்கலை கல்லூரி கட்டப்படும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார். முன்னதாக, கலெக்டர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மதிப்பில் மகோகனி மரக்கன்றுகள், ராகி விதைகள், துவரை நாற்றுகள், சுழற்கலப்பை, நிலக்கடலை சிறுதளைகள் உள்பட ₹1.52 லட்சம் மதிப்பிலான விவசாய இடுபொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, இந்தோ-இஸ்ரேல் கொய்மலர் சாகுபடி மைய திட்ட அலுவலர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் சரவணன், ஜெனிபர், சிவசங்கரி, வேளாண் துறை உதவி இயக்குநர்கள் ஷேவியர், முருகன், கொய்மலர் சாகுபடி திட்ட மேலாளர் ராம்குமார், ரமேஷ், தமிழரசன், ஆனந்தி, ஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

14 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi