*ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சத்யாசதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் பாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் சின்னவேப்பம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் 550 மீட்டர் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ₹70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணி துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தி ஒரு வருடத்திற்கு மேலாகியும் பணி நடைபெறாமல் உள்ளது. ஆகையால், சமுதாயக்கூடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
பாச்சல் ஒன்றியம், ஜெய்பீம் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி 6 மாதங்களாகியும் சீரமைக்காமல் உள்ளது.
பசுமை நகரில் 1 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். எஸ்ஆர்டிபிஎஸ் குழந்தை காப்பகத்திற்கு செல்லும் மண் சாலையாக உள்ளதை தார் சாலையாக மாற்ற வேண்டும். வெலக்கல்நத்தம் ஊராட்சியை பிரித்து 2 ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.மண்டலவாடி ஊராட்சியில் மேலும் ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.