காஞ்சிபுரம், செப்.21: காஞ்சிபுரத்தில் உள்ள உணவகங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை ஆய்வு செய்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள துரித உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காமராஜர் வீதி, காந்தி ரோடு, இந்திரா காந்தி சாலை, காமாட்சி அம்மன் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 55 உணவகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உணவுக்கூடம், குளிர்சாதனப்பெட்டி, உணவு பதப்படுத்தும் அறை என்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 23 உணவகங்களில் மாதிரி உணவு வகைகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினர். 3 உணவகங்களில் விதியை மீறி உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளதால், 28 கிலோ உணவு வகைகளை பறிமுதல் செய்தனர். பாதுகாப்பான, சுகாதாரமான நல்ல முறையில் வாடிக்கையாளர்களுக்கு, உணவு வகைகளை வழங்கும்படி ஓட்டல் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.