ஆண்டிபட்டி, மே 14: ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் கோடை வெயிலால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனை கருத்தில்கொண்டு அரசின் உத்தரவுப்படி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கடந்த 10ம் தேதி விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் 5 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 4 நாட்கள், மூன்றாம் கட்டமாக மதுரை மாவட்டத்திற்கு 6 நாட்கள் என மொத்தம் 15 நாட்களுக்கு அணையில் இருந்து மொத்தம் 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
வைகை அணையிலிருந்து கடந்த சில நாட்களாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 52.40 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 92 கன அடியாக உள்ளது.